Tuesday, August 14, 2012

ஆச்சார்யா ராஜினாமா - ஆச்சர்ய தகவல்கள்


பெங்களூருவில் இரண்டு மகாமகம் காணப்போகும் சொத்துகுவிப்பு வழக்கு, 'ஜெ.வின் சொத்துகுவிப்பு வழக்கு' என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. உண்மையில் அது 'ஜெ.வின் ஊழல் சொத்துகுவிப்பு வழக்கு' என்றே குறிப்பிடப்படவேண்டும். 'ஊழல்' என்கிற வார்த்தையை பெரும்பாலான பத்திரிக்கைகள் பயன்படுத்ததவறுகின்றன, 2ஜி ஊழல் வழக்கு எப்படியோ அதேபோலத்தான் ஜெவின் ஊழல் வழக்கும். போகட்டும், இலக்கண வகுப்பு எடுப்பது என் எண்ணமில்லை. விஷயம் என்னன்னா, அசோக சக்கரவர்த்தி குளம் வெட்டி மரம் நட்ட நாட்களிலிருந்து ஜெவின் ஊழல் சொத்துகுவிப்பு வழக்கு  நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிரகத்தில் மனிதன் குடியேறி அந்தகிரகத்தின் சுற்றுப்புற சூழ்நிலையை மாசுபடுத்தும் திருநாள் வரை இந்த வழக்கு நடைபெறும் என்ற பேருண்மையை கண்டுணர்ந்த திமுக, மேற்படி வழக்கினை உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடத்திடவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறது. அந்த மனுவுக்கு பதில் சொல்வதற்கும் வாய்தா வாங்கியது ஜெவின் வாய்தா அணி,சாரி வழக்கறிஞர் அணி.

இந்நேரம் பார்த்து கர்நாடக அரசு சார்பாக சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆச்சார்யா 'மன் உளைச்சலை' காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அசைக்கவே முடியாத ஆலமரமாக இருந்த ஆச்சார்யா தானாகவே சாய்ந்ததை சுவீட் எடுத்து கொண்டாடி வருகிறது போயஸ் கார்டன். உண்மையில், ஆச்சார்யா இப்போதுதான் அதிக நெருக்கடியை ஜெவுக்கு தந்திருக்கிறார் என்பது என் எண்ணம். கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படுவதாக ஆச்சார்யாவுக்கு குச்சி ஐஸை காட்டி ஏற்கனவே ஏமாந்திருந்த ஒரு லாபியினர், அவருக்கு தொடர்ந்து இம்சையை கொடுத்து வந்திருக்கின்றனறர். இவரும் எவ்வளவோ பொறுத்தப்பார்த்தார், முடியவில்லை. இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன்பாக வழக்கு வந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது என்று திமுக  உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருக்கும் இந்நேரத்தில் ஆச்சார்யாவின் ராஜினாமாவுக்கான காரணத்தையும் சொல்லி திமுக அடுத்த முறை வாதம் செய்யும். ராஜினாமா முடிவு ஆச்சார்யா தானாக எடுத்த முடிவாகயிருக்காது, நிச்சயம் ஏதோ உள்குத்து நடந்திருக்கவேண்டும். திமுக மனு செய்திருக்கும் வேளையில் ஆச்சார்யாவின் ராஜினாமா எழுப்பப்போகும் அதிர்வுகள் ரிக்டர் அளவுகோளில் குறிப்பிடத்தக்க பதிவுகளை தேவையானவர்கள் எதிர்பார்த்திருந்த அளவுக்கு ஏற்படுத்தும். கூட்டிகழிச்சுப்பாருங்க, கணக்கு சரியா வரும். எது எப்படியோ, கிரிஸ்டலை தின்னவன் ஹெ2ஓவை குடிச்சுத்தான் ஆகணும்.

Saturday, August 11, 2012

ராஜபக்சே ரொம்ப நல்லவன்டா

  TESO களேபரங்கள்

ஈழத்திற்காக நம்ம ஊர் அரசியல்வாதிகளின் சொந்த பங்களிப்பு என்ன?
சிலர் கனடாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பறந்தார்கள். கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துபோய் ஈழத்தமிழருக்காக சொற்பொழிவு ஆற்றினார்கள், ஆனால் ஈழத்தின் பக்கம் மட்டும் திரும்பவேயில்லை. அவர்களின் பாஸ்போர்ட்டில் எல்லா ஊர்களின் முத்திரையும் இருந்தது, இலங்கையைத்தவிர. இலங்கைக்கு போய் அதே வாய்ச்சவடாலை காட்டியிருந்தால் ஜட்டியை கழட்டி படுக்கப்போட்டு சுட்டுப்பொசுக்கி போட்டொ எடுத்து இன்டர்நெட்டில் உலவ விட்டிருப்பான் பொன்சேகா. ஆனா, நகரம் படத்தில் வடிவேலு சுந்தர் சி.யை வம்புக்கு இழுக்கிற மாதிரி நாலு ஸ்டெப் தள்ளி நின்றுகொண்டே கடைசிவரை குரைத்தார்கள். இன்னும் நின்றபாடில்லை. அவர்கள் நடத்திய கூட்டங்களுக்கும், காங்கிரசுக்கு எதிரான கண்டனங்களுக்கும் எந்த குறையுமில்லாமல் இனிதே நடந்தேறியது, நடந்தேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த கூட்டங்களினாலோ, வெளிநாட்டு பயணங்களினாலோ அங்கே வாடும் தமிழருக்கு ஏதேனும் ஒரே ஒரு நல்லதாவது நடந்ததா? ஒரே ஒரு உயிரையாவது காப்பாற்ற முடிந்ததா? இவர்களின் வாய்ச்சவடால் சிங்கள ராணுவத்தை மேலும் மேலும் சீண்டி இன்னும் வேகமாக அல்லவா இயங்க வைத்தது? படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் பிணத்தைவைத்து இங்கே பிழைப்பு நடத்தியவர்கள்தான் அதிகம். பறந்து பறந்து பணியாற்றியவர்களின் பாக்கெட்டுகள் டாலர்களாகவும் பவுண்டுகளாகவும் பல் இளித்ததுதான் மிச்சம்.  அதுநாள் வரை ஈழத்துக்காக எந்த ஒரு அடியும் எடுத்துவைக்காத ஜெயலலிதா, முந்தைய பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பதிவான குறிப்பிட்ட அளவு ஈழ ஆதர்வாளர்களின் ஓட்டுக்களை மனதில் வைத்து இப்போது பார்ட்டைம் ஈழவாதியாகியிருக்கிறார்.

காலை சாப்பாடு செரிப்பதற்காக ஒன்றரை மணிநேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதியும் இப்போது அதே ஈழத்தை வைத்து அரசியல் செய்துவிட்டுத்தான் போகட்டுமே? யாருக்கு என்ன நட்டம்?  யாருக்கும் எந்த லாபமும் கிடையாது - நானும் ஈழத்திற்காக போராடியவன் என்று பின்னாளில் தன்னுடைய கேள்வி-பதில் கட்டுரையில் பட்டியலிடுவதற்கு இந்த மாநாட்டையும் கருணாநிதி சேர்த்துக்கொள்ளலம் என்பதைத்தவிர. இறுதி யுத்தத்தின்போதும் சரி, இப்போதும் சரி, ஈழத்தமிழர்களின் பிணக்குவியல்கள் மீது தங்கள் வாய் என்னும் கடையைபரப்பி லாபம் பார்க்கும் உணர்ச்சியாளர்கள்தான், ஏதோ ஈழத்துக்கான பன்னாட்டு தூதர்கள் போலவும், ஈழம் என்றாலே அது தாங்கள்தான் வேற யாரும் தங்கள் உரிமையை பங்குபோட்டுக்கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தினாலும் டெசோ மாநாட்டிற்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள்.

இதற்கு முன்பிருந்தே போராடியவர்கள் ஏறிய அதே ஜீப்பில் தான் கருணாநிதியும் இப்போது வாலன்டியராக போய் ஏறுகிறார். என்ன ஒரே ஒரு பிரச்சனை, ஏற்கனவே ஜீப்பில் இருப்பவர்களுக்குள்ளேயே இட நெருக்கடி. கொரில்லா செல் ஏற்கனவே ஹவுஸ்ஃபுல். கொஞ்சம் கஷ்டம்தான், இருந்தாலும் இவரும் இருந்துவிட்டுப்போகட்டுமே. இந்த மாநாடு முடிந்தவுடன் ராஜபக்சே சகோதரர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்காக பாவ மன்னிப்பு கேட்கப்போகிறார்களா அல்லது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏதேனும் நிவாரணம் கிடைத்துவிடப்போகிறதா? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.

ஆட்சியில் இல்லாமல் எதிர்கட்சியாக இருப்பவர்களுக்கு எப்பவுமே ஈழ விவகாரம் லட்டு மாதிரி. ஆளுங்கட்சியை காய்ச்சி எடுத்துவிடலாம். தமிழர் நலன், இனவுணர்வு, மனிதாபிமானம் எனப்பேசி ஆளுங்கட்சிக்கு சங்கடம் உண்டாக்க எளிதான வழி. ஆனால் எந்தக்கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும் ஒன்றையும் புடுங்கிவிடமுடியாது. ஆனா ஒண்ணுடா, ராஜபக்சேவாவது தன்னுடைய சொந்த நாட்டிற்காக குடும்பத்திற்காக கொடுங்கோலனாக இருந்தான். ஆனா செத்த பொணத்தை வச்சியும் வயிறு நனைகிற உங்களுக்கு ராஜபக்ஷே எவ்வளவோ பரவாயில்லடா.

Sunday, April 1, 2012

அடுத்தது எந்த தொகுதிக்கு அந்த லக்?

திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை


சங்கரன்கோவில் தொகுதி மக்களைத்தொடர்ந்து புதுக்கோட்டை தொகுதி மக்களுக்கு ஓர் நற்செய்தி. இதனால் உங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் இன்னும் ஒரு 6 மாதத்திற்குள் உங்களுக்கு எல்லாவிதமான மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு, லேப்டாப், லொட்டு லொசுக்கு என அரசின் நலத்திட்டங்களும் கிடைக்க வழிபிறந்துள்ளது. ஆறுமாத காலத்தின் கடைசி ஒரு மாதத்திற்கு உங்களுக்கு மின்சாரத்தட்டுப்பாடு இருக்கவே இருக்காது. ஆறு மாதங்கள் முடியும் தருவாயில் உங்கள் ஊருக்கு எல்லா அமைச்சர்களும் வருவார்கள். உங்கள் ஊரிலேயே கிடையை போட்டுவிடுவார்கள். எந்த அமைச்சரையும் எம்.எல்.ஏயையும் நீங்கள் தேடிப்போகவேண்டியதில்லை. குளிப்பதற்கு பன்னீரும் வாய் கொப்பளிக்க பீரும் ஏற்பாடு செய்யப்படும். டாஸ்மாக் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். 'கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் இடைத்தேர்தல் டோர்-டெலிவரி நல்லிணக்கக்குழு' உங்களை திக்குமுக்காடச்செய்யும். சூதுவாதனமாக இருந்து ஆறு மாதத்திற்குள் தேவையானவற்றை கேட்டுப்பெற்றுக்கொள்ளவேண்டும். ஆஹா, நமக்கு நல்லகாலம் பொறந்துடுச்சுன்னு சங்கரன்கோவில் மக்கள் மாதிரி ஏமாளிகளாக இருக்கக்கூடாது.

ஆறு மாதம் முடிந்தவுடன் உங்களுக்கான ராஜமரியாதை ஒரே நாளில் போய்விடும். ஓட்டுப்போட்டபின் உங்கள் விரல் மை காய்வதற்குள் பஸ்கட்டணமோ, மின் கட்டணமோ, பத்திரப்பதிவு கட்டணமோ அல்லது எது அத்தியாவசிய தேவையோ அதன் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும். உங்க ஊர்ல ஏதாவது தொழிற்சாலைக்கு எதிராக நீங்கள் போராடினால் இந்த ஆறு மாதகாலத்திற்கும் அரசாங்கம் உங்கள் பக்கம் இருக்கும். அது வரைக்கும் நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். போராட்டங்களுக்கு கலெக்டர் நேரில் வந்து வாழ்த்துபா வாசிப்பார். கலவரங்களுக்கு எஸ்பி கல்லெடுத்து கொடுப்பார். உங்கள் ஒவ்வொரு முயற்சிக்கு பின்னாலும் அரசு யந்திரம் சுழலும். ஆனால் இது நிரந்தரம் என்று நீங்கள் வாயைபிளந்துகொண்டு நின்றுவிடக்கூடாது. ஓட்டுப்போட்டுவிட்டு வெளியே வந்து நின்று ஒய்யாரமாக நீங்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கமுயலும்போது உங்கள் மீது தேசதுரோக வழக்கு பாயும். குண்டர் சட்டம் நாலுகால் பாய்ச்சலில் வரும் - தனுஷ் மாதிரி ஒல்லியா இருக்கிறேன், என்னையெல்லாம் குண்டர் சட்டத்தில் போடமுடியாது என்றெல்லாம் நீங்கள் வாதாடமுடியாது. ஆகவே உங்களுக்கு என்னவெல்லாம் தேவையிருக்கிறதோ அதையெல்லாம் இப்பவே வாங்கிக்கொள்ளுங்கள். கடந்த ஆறு மாதங்களாக சங்கரன்கோவில் தொகுதி மக்கள் ராஜாவாக வலம்வந்தார்கள். இப்போது உங்களுக்கு அந்த கொடுப்பினை கிட்டியிருக்கிறது. இந்த ராஜயோகம் எல்லாருக்கும் கிட்டிவிடாது. எங்க ஊர்லயும்தான் எம்.எல்.ஏ இருக்காரு. எங்க தொகுதிக்கும் அந்த பாக்கியம் கிடைக்காதா என்று எல்லா தொகுதி மக்களும் ஏங்கிபோய் இருக்கிறார்கள். எங்க ஊரு எம்.எல்.ஏக்கு வயசு 60க்கும் மேல ஆய்டுச்சு. நானும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். நம்பிக்கைதானேங்க வாழ்க்கை.

Thursday, January 19, 2012

நீங்களா இருந்தா என்ன பண்ணுவீங்க?

ஏதாவது ஒரு திரைப்படம் பார்த்து அந்தப்படத்தில் உங்களுக்கு விருப்பமில்லாத அல்லது உங்கள் கருத்துக்கு ஒவ்வாத ஒரு காட்சியையோ அல்லது கதையின் போக்கையோ மாற்ற விரும்பினால், எந்தப்படத்தில் என்ன காட்சியை மாற்றுவீர்கள் அல்லது என்ன மாறுதலை உண்டாக்குவீர்கள்?

எந்திரன் படத்தில் இயந்திரமாக வரும் ரஜினி ஐஸ்வர்யாவை விரும்பும். அதற்கு தடையாக இருக்கும் தன் எஜமானன் விஞ்ஞானி-ரஜினிக்கு தொல்லைதர ஆரம்பிக்கும். அந்தப்படத்தின் கதையை அப்படி கொண்டுசெல்லாமல், எந்திர-ரஜினிக்கு ஐஸ்வர்யாவைபிடித்துப்போய்விட்ட காரணத்தினால், ஐஸ்வர்யாவைப்போலவே வேறொரு எந்திரத்தை அதாவது எந்திர-ஐஸ்வர்யாவை உருவாக்கி எந்திர-ரஜினியும் எந்திர-ஐஸ்வர்யாவும் லவ்வுவதாக கதையை மாற்றியிருக்கலாம்.

விஞ்ஞானி-ரஜினியைப்போலவே அச்சு அசலாக எந்திர-ரஜினியை கதைக்குள் கொண்டுவரமுடியும்போது எந்திர-ஐஸ்வர்யாவையும் கொண்டுவந்திருக்கமுடியும். இடைவேளையின்போது எந்திர-ரஜினி ஐஸ்வர்யா ஒரு ஜோடியும், விஞ்ஞானி ரஜினியும் அவரது காதலி ஒரு ஜோடியுமாக ஒரு சூப்பர் டூயட் பாடலை வைத்திருக்கலாம். இடைவேளையிலேயே இவர்கள் சேர்வதாக காட்டிவிட்டு அதன்பிறகு கதையை எப்படி கொண்டு சென்றிருக்கமுடியும்?

இருக்கவே இருக்கு, ஷங்கரின் ஃபேவரிட் கருப்புபண விவகாரம். எந்திரஜோடிகளான ரஜினியும் ஐஸ்வர்யாவும் சுவர்ட்ஸர்லாந்து, ஜெர்மனி, போன்ற பிற நாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை கண்டுபிடிப்பதாகவும், அதற்கு வில்லன் எந்திரன் இடைஞ்சல் செய்வதுபோலவும் கொண்டு சென்றிருக்கலாம் என்பது என் சிற்றறிவுக்கு தோன்றுகிறது. போயும் போயும் ஒரு பெண்ணுக்காக அந்த எந்திரம் அவ்வளவு சாகசங்களையும் செய்வதாக படத்தில் வருவதை அவ்வளவாக லயித்துப்பார்க்கமுடியவில்லை.

அதே மாதிரி, இயற்கை படமும். அந்தப்படத்தில் கிளைமாக்ஸ் தவிர மற்ற அனைத்துமே சிறப்பம்சம். கிளைமாக்ஸ் காட்சியில் எனக்கு உடன்பாடில்லை. கிளைமாக்ஸ் காட்சியில் காதலி அவளுடைய பழைய காதலனை நீண்ட நாட்களுக்குப்பிறகு சந்திக்க நேர்ந்தவுடன் ஷாம் பெருந்தன்மையுடன் ஊரைகாலிசெய்துவிட்டு செல்வதாக முடியும். ஆனால் வேறு மாதிரி யோசித்திருக்கலாம் எனக்குப்படுகிறது.

அவளுடைய முன்னாள் இன்னாள் காதலர்கள் இருவருமே கப்பலில் வேலை செய்பவர்களாக காட்டியிருப்பதால், கிளைமாக்ஸ் காட்சியில் அந்த இருவரில் யாராவது ஒருவர் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுப்பதாகவும், ஆனால் அப்படி விட்டுக்கொடுக்கும் நபர் யாரென்று பார்வையாளர்களுக்கு வெளிப்படையாக தெரியாமல் அவர்களின் ஊகத்திற்கே விட்டுவிடும்படியாகவும் அமைத்திருக்கலம். அதாவது கிளைமாக்ஸ் காட்சியில் அருண்விஜய்யும் குட்டி ராதிகாவும் சேர்வதாக காட்சியை அமைத்திருந்ததை விட்டுவிட்டு, குட்டி ராதிகா அந்த இருவரில் யாரோ ஒருவனோடு சேர்ந்ததாகவும், பெருந்தன்மையுடன் அவளைப்பிரிந்துசென்ற அந்த இருவரில் ஒருவன் யாரென்பதை விஷுவலில் காட்டாமல் அதனை பார்வையாளர்களின் முடிவுக்கே விட்டுவிட்டிருந்தால் நல்ல ட்விஸ்டாயிருந்திருக்கும். ஃப்ராங்க் ஸ்டாக்டன் எழுதிய 'த லேடி ஆர் த டைகர்' சிறுகதையில் வருவதைபோல கிளைமாக்ஸ் காட்சியை அமைத்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும் என்பது என் கருத்து.

அதே மாதிரி ஆனந்த தொல்லை படத்தில் ஒரு மாற்றம் செய்தால் நன்றாகயிருக்கும் என நம்புகிறேன். படம் ஆரம்பித்த உடன் டைட்டில் கார்டு ஓடி முடித்தவுடன் பவர்ஸ்டார் சீனிவாசன் அவர்கள் திரையில் தோன்றி வணக்கம் வைத்தவுடன் 'நன்றி' என என்ட்கார்ட் போட்டால் பிரமாதமாயிருக்கும். மூன்றே நிமிடத்தில் படம் முடிந்திருக்கும். பவர்ஸ்டார் ஆகசன் காட்டும் காட்சிகள் எல்லாம் பார்ப்பவர்களை பயமுறுத்துவதாக இருப்பதால் படத்தின் மொத்தகாட்சிகளும் சென்சார் செய்யப்பட்டு என்ட்கார்ட் மட்டுமே தேறியிருக்கும்.

Wednesday, December 21, 2011

அகில இந்திய பேரரசு - ஹரி ரசிகர்கள் மன்றம்

இவுங்களுக்குத்தான் ரசிகர் மன்றம் இல்லாம இருந்துச்சி, அதையும் நடத்திட்டாய்ங்களா என்று நினைக்காதீர்கள். இயக்குனர் பேரரசு, ஹரி போன்ற இயக்குனர்களைப்பற்றி தமிழ் சினிமா உலகில் ஒரு மோசமான பெயர் அதிமேதாவிகளால் ஏகபோகமாக ஏளனமாக பரப்பப்பட்டு வருகிறது. ஒரு மோசமான படத்தைப்பற்றி விமர்சிப்பதற்கு இந்த மாதிரியான இயக்குனர்களின் படங்கள் மேற்கோள் காட்டப்பட்டு மட்டம்தட்டப்படுகின்றன.

இந்த மாதிரி இயக்குனர்களின் படைப்பும் மதிக்கப்படவேண்டும். பிற படங்களில் வேலை செய்யாவிட்டாலும் அந்தப்படங்களின் வெற்றிக்கு இந்த ஸோ-கால்டு மசாலா இயக்குனர்களும் ஒருவிதத்தில் காரணமாகிறார்கள். நீங்கள் தியேட்டருக்கு படம் பார்க்கபோகிறீர்கள். அங்கே மைனா, மைதானம், தென்மேற்கு பருவகாற்று, நான் கடவுள், செங்கடல் மாதிரியான படங்கள்தான் ஓடுகின்றன என்று வைத்துக்கொள்வோம். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதிலும் சில நொட்டைகள் சொல்லிவிட்டு வருவோம். அடுத்த வாரம் மறுபடியும் தியேட்டருக்கு போகிறீர்கள். அதுசமயம் சுப்ரமணியபுரம், காதல், எங்கேயும் எப்போதும் மாதிரியான சீரியஸான கதையம்சம் உள்ள படங்கள் ஓடுகின்றன. வேறு வழியில்லாமல் அதையும் பார்த்து தொலைத்துவிட்டு வருகிறீர்கள். இன்னும் ஒரு வாரத்தில் வேறு வழியே இல்லாமல் திரும்பவும் தியேட்டருக்கு செல்கிறீர்கள். அப்பவும் இதே மாதிரியான படங்களே ஓடிக்கொண்டிருந்தால் என்னாவது?

மலையாள சினிமா ஒருகாலத்தில் இதே மாதிரிதான் பெரும்பாலும் கதைக்காவே ஓடிக்கொண்டிருந்தன. அவர்களும் ரொம்ப பொறுமையாக இருந்தார்கள். ஒருகட்டத்தில் கதைவேட்கை போரடிக்க ஆரம்பித்த நேரத்தில் ஷகிலாவின் சதை அவர்களை கட்டிப்போட்டது. மலையாள சூப்பர்ஸ்டார்கள் ஷகிலாவை மிரட்டி விரட்டவேண்டிய அளவுக்கு போய்விட்டது.

மலையாள சினிமாவுக்கு அப்படிப்பட்ட ஒரு சோதனை வந்ததற்கு ஷகிலா எந்தவிதத்திலும் காரணமில்லை. லட்டு பிடிக்குமென்றால் ஆசைக்கு நான்கைந்து சாப்பிடலாம். ஆனால் அதுவே மூன்று வேளைக்கும் உணவாகும்பட்சத்தில் அந்த இனிப்பு வெகுவிரைவில் கசக்க ஆரம்பித்துவிடும். மேட்டருக்கு வருகிறேன்.

மலையாள தெலுங்கு சினிமா உலகங்கள் தமிழ்சினிமாக்களுக்கு அவுங்க அவுங்க ஏரியாவில் முடிந்தவரை தடைபோட முயற்சிக்கிறார்கள். ஆனால் நாம் நம்ம ஊரிலேயே நம்ம ஆட்களை கலாய்க்கிறோம். டி.ஆர்., பேரரசு, ஹரி, கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, விக்ரமன் போன்றோரின் பங்களிப்பு இல்லாமல் எல்லாமே சைவ திரைப்படங்களாக்வே இருந்திருந்தால்? கற்பனை செய்துபாருங்கள்.

நம்ம ஊர்லயும் எல்லா படங்களும் சீரியஸாகவே போய்கொண்டிருந்தால் அது நல்லதே அல்ல. ஒரு சமயத்தில் எல்லாவிதமான படங்களும் வருவதுதான் நல்லது. ஏனெனில் கதைக்காக யாரும் சினிமா பார்க்கவருவதில்லை. 99% பேர் பொழுதுபோக்கிற்காகத்தான் வருகிறார்கள்.அதிலும் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். எனவே அவர்களை மையப்படுத்திதான் எடுக்க முடியும். சினிமா மூலம் குடும்ப உறவுகளின் மேன்மையையோ அல்லது சமூக விழிப்புணர்வு படங்களையோ தந்து போட்ட காசை எடுக்கமுடியாது. இப்படி சொல்வதால் இனிமேல் படம் எடுக்கும் எல்லாருமே அயிட்டம் பாட்டில் ஆரம்பித்து குத்துப்பாட்டில் முடிக்கச்சொல்லி கேட்கவில்லை. ஆனால் இவை இல்லாமல் எல்லா படங்களும் சீரியஸாக வர ஆரம்பித்தால் திருட்டு விசிடியில் கூட பிறகு படம் பார்க்கமாட்டார்கள்.

சமீபத்தில் வெளியான படங்களில் சிங்கம்தான் மிக அதிக வசூலைத்தந்தது. எந்திரன், ஏழாம் அறிவு எல்லாமும் கூட அதிக வசூலைத்தந்திருக்கலாம். ஆனால் ஒரு படத்திற்கு ஆகும் செல்வையும் அது திரும்ப கொடுக்கும் வசூலையும் வைத்துபார்க்கும்போது ஏழாம் அறிவை விட சிங்கம் மிகப்பெரிய வெற்றி. சிறந்த விமர்சனங்களைபெற்ற மைனாவோ அல்லது சுப்ரமணியபுரமோ பெற்ற வெற்றியைவிட சிங்கம் பெற்ற வெற்றி பெரியது. படம் பார்க்க வருகிறவர்களுக்கு தேவை பொழுதுபோக்கு. அவர்களை திருப்தி செய்து அனுப்புவதே இயக்குனரின் முதல் கடமையாகும். விமர்சகர்களை மனதில் வைத்து படம் எடுத்தால் முதுகில் செல்லமாக தட்டி கொடுப்பார்கள். ஆனால் தலையில் விழுந்திருக்கும் துண்டு தரும் வலி அவர்களால் உணரமுடியாது.

பேரரசு படங்களில் வரும் காமெடி காட்சிகளை திறந்த மனதுடன் பாருங்கள் காமெடி பகுதி மிகவும் நன்றாகயிருக்கும். (ஆனால் பேரரசு ஸ்லோ மோஷனில் நடந்துவரும் காட்சியின்போது தயவுசெய்து சிறுவர்கள், கர்ப்பிணிபெண்கள், இருதய பலகீனமுள்ளவர்கள், வயதானோரை பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்). சரிந்து விழுந்த நடிகர் விஜயின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியதே திருப்பாச்சிதான். எனவே இந்த மாதிரியான இயக்குனர்களின் படைப்பை கிண்டலுக்குள்ளாக்காதீர்கள்.

இவர்கள் படைப்பு இப்படித்தான் இருக்கும் என்ற பொது அறிவோடு செல்லுங்கள். பாலா படத்திற்கும், பேரரசு படத்திற்கும், சங்கர் படத்திற்கும், மணிரத்னம் படத்திற்கும் உள்ள வேறுபாட்டை முதலிலேயே தெரிந்துகொண்டு அதிக எதிர்பார்ப்பில்லாமல் போய் வாருங்கள். வித்தியாசத்தை உணர்வீர்கள். கட்டுரைக்கு கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. எனவெ முக்கியமான பகுதியை சொல்லி முடிக்கிறேன். நான் ஆரம்பிக்கப்போகும் அடுத்த ரசிகர்மன்றத்திற்கு எங்கள் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறேன்.